Wednesday, September 29, 2021

 

மாளிகாபுரம்  நாட்டை “குய்யோமுறையோ” என்ற மன்னர் ஆண்டு வந்தார். எவரையும் மதிக்க மாட்டார். அவருடைய முட்டாள்தனத்துக்கு அளவே கிடையாது. அரசவையில் வேலை செய்பவர்களுக்கு, மன்னர் எந்த நேரத்தில் என்ன சொல்வாரோ என்று பதற்றமாகவே இருக்கும். மக்களின் நிலைமையோ இன்னும் மோசமாக இருந்தது.

அன்று அரசவையில் மன்னர் குய்யோமுறையோ மந்திரிகளைப் பார்த்துக் கேட்டார்: “என்னை இந்த நாட்டில் எல்லோரும் மதிக்கின்றனரா?”உடனே அவையில் கூடியிருந்த அனைவரும் “ஆம் மன்னா!” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

முக்கிய மந்திரி அப்பிராணியார் முன்னால் வந்து, “மன்னா,உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம்.காலையில் இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உங்கள் படத்தை வணங்கிய பிறகே தங்கள் வேலைகளை ஆரம்பிக்கின்றனர். உங்கள் பெயரைச் சொன்னால், தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள்கூட வணக்கம் சொல்கின்றனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகள்கூடத் தங்கள் பெயரைக் கேட்டால், அவற்றின் மொழியில் வணக்கம் என்று கத்துகின்றன. இவற்றை எல்லாம் கண்காணிக்கவே நாடு முழுக்கப் பல்லாயிரக்கணக்கான படை வீரர்களை நீங்கள் தானே நியமித்துள்ளீர்கள்! இப்போது ஏன் திடீரென்று சந்தேகம், மன்னா?”என்றார். “உலகிலேயே தலைசிறந்த மன்னனான என்னை இந்த நாட்டில் வணங்காதவர்களும் இருக்கின்றனர்.”

“தங்களை எதிர்த்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். தங்களை வணங்காதவர்கள் நம் நாட்டில் இருக்கவே முடியாது மன்னா” என்றார் அப்பிராணியார். எதிர்த்துப் பேசியதற்கு என்ன தண்டனை தரப் போகிறாரோ என்ற அச்சத்தில் அவருடைய உடல் நடுங்கியது.

விறுவிறுவென்று அரண்மனைத் தோட்டம் நோக்கிச் சென்றார். வேறு வழியில்லாததால் முக்கிய மந்திரியான அப்பிராணியாரும் மற்ற மந்திரிகளும் அவர் பின்னே சென்றனர்.

மன்னர் குய்யோமுறையோ அப்பிராணியாரைப் பார்த்து, “பார்த்தீர்களா மந்திரியாரே, இந்தத் தோட்டத்தில் நான் வந்து நின்று சில நொடிகள் ஆகியும், அந்த மரம் என்னை வணங்கவில்லை, இந்தச் செடி கொடிகள் என்னை வணங்கவில்லை. அதோ மேலே தெரிகிறதே வானம் அது என்னை வணங்கவில்லை, இவ்வளவு ஏன் அதோ தூரத்தில் தெரிகிறதே அந்த மலைகூட என்னை வணங்கவில்லை” என்று கோபப்பட்டார்.

“மன்னா, தாங்கள் எங்களுக்குத்தான் மன்னர். அதனால் நாங்கள் வணங்குகிறோம். இயற்கையைத்தான் மனிதர்கள் வணங்க வேண்டுமே தவிர, இயற்கை மனிதர்களை வணங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தன்னை அறியாமல் பேசிவிட்டார். அப்பிராணியார்.

என்ன நடக்கப் போகிறதோ என்று மற்ற மந்திரிகள் பயந்தனர்.

மன்னர் கோபத்துடன், “யாரிடம் பேசுகிறீர்கள் என்று தங்களுக்கு மறந்துவிட்டதோ?” என்று கேட்டார்.

“மன்னா, அவை எல்லாம் எப்படி வணங்கும்? நீங்களே சொல்லுங்கள்?”

“என் நாட்டில் இருக்கும் அனைத்துக்கும் நான் தான் மன்னன். மனிதர்களோ மரங்களோ என்னை வணங்காவிட்டால் அது ராஜ குற்றம்தான்?”

“மன்னா... ”

”முக்கிய மந்திரி என்பதால் நீங்கள் எதிர்த்துப் பேசியதை நான் குற்றமாகக் கருதவில்லை. என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம். அதற்குள் என் அருமை பெருமைகளை அவற்றிடம் எடுத்துச் சொல்லி, என்னை வணங்க வைக்க வேண்டியது தங்களுடைய பொறுப்பு. இல்லையேல் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது” என்று குய்யோமுறையோ பற்களைக் கடித்தார்.

மன்னர் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியுமா?

அப்பிராணியாருக்கு இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. மனைவியிடம், “மன்னரின் முட்டாள்தனங்களை இனியும் சகிக்க முடியாது. நாம் பக்கத்து நாட்டுக்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம்” என்று வருத்தத்துடன் கூறினார்.

காரணத்தை அறிந்துகொண்ட அப்பிராணியாரின் மனைவி, “இது நம் நாடு. நாம் ஏன் இன்னொரு நாட்டுக்குச் செல்ல வேண்டும்? முட்டாள்தனமான மன்னருக்குப் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு, அப்பிராணியாரின் காதில் தன் திட்டத்தைச் சொன்னார்.

“இது நல்ல யோசனையா என்று தெரியவில்லை. ஆனால், ஏதாவது செய்துதானே ஆக வேண்டும்? இதை மன்னர் ஏற்றுக்கொண்டால் நாம் தப்பிப்போம். இல்லாவிட்டால், என்ன கதி ஆவோம் என்றே தெரியாது” என்று கவலையுடன் கூறினார். அப்பிராணியார்.

“நமக்கு வேறு வழியில்லை. நம் மன்னர் இதுபோன்ற யோசனைகளை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்” என்று தைரியம் கொடுத்தார் அப்பிராணியார் மனைவி.

அடுத்த இரு தினங்களில் அப்பிராணியார் அதைச் செய்து, ஒரு ஒரு பட்டுத் துணியில் சுற்றிக்கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.

“என்ன அப்பிராணியாரே, என்னைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியதெல்லாம் மரம் செடி கொடிகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீரா? எந்த அளவில் உள்ளது அந்தப் பணி?” என்றார் மன்னர் குய்யோமுறையோ.

“மன்னா, நான் நினைத்ததைவிட அவை வெகு விரைவில் உங்களைப் புரிந்துகொண்டுவிட்டன.”

“அப்படியா!”வாருங்கள் என்னோடு” என்றார்  மன்னர்,

“ஆமாம் மன்னா, இப்பொழுதே என்னுடன் தோட்டத்துக்கு வாருங்கள், அவை எல்லாம் உங்கள் காலடியில் விழுந்து வணங்கும்.”

இப்படிச் சொன்னவுடன் மன்னருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவையிலிருந்த மற்றவர்களோ பயத்தில் அப்பிராணியாருக்குப் புத்தி பேதலித்துவிட்டது என்றே எண்ணினார்கள்.

தோட்டத்துக்குள் நுழையும் முன் மன்னரை நிறுத்திய அப்பிராணியார், “மன்னா, இதை அணிந்துகொண்டு நுழையுங்கள்” என்று பட்டுத்துணியில் சுற்றி வைத்திருந்த காலணிகளை எடுத்துக்

கொடுத்தார். வேலைப்பாடு நிறைந்த அந்தக் காலணிகளின் மேல் புறத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது.

அதை அணிந்துகொண்டு மன்னர் தோட்டத்துக்குள் நுழைந்த உடன் வானம் அவரது காலணியில் இருந்த கண்ணாடியில் தெரிந்தது, அதைச் சுட்டிக் காட்டிய அப்பிராணியார், “மன்னா, அதோ பாருங்கள் வானம். உங்கள் காலடியில் விழுந்து வணக்கம் சொல்கிறது” என்றார்.

மன்னருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மரத்தின் பக்கம் போய் நின்றார். மரத்தின் உருவமும் அவர் காலணிகளின் காண்ணாடியில் பிரதிபலித்தது. இப்படியே செடிகொடிகள் எல்லாம் மன்னர் காலடியில் வணக்கம் தெரிவிக்க, மகிழ்ந்து போனார் மன்னர் குய்யோமுறையோ.

இதைச் சாதித்த அப்பிராணியாருக்குப் பொன்னும் பொருளும் வழங்கினார்.

சகோதர சகோதரிகளே! நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. புரிந்தால் சரி.

 

 

 


 

 

Monday, September 27, 2021

 

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், ‘நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக் கேட்டது.

‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித் தவளை.

‘ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்பவில்லை. ‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது’ என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து ‘நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

சகோதர சகோதரிகளே 

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

 

 

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.

நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். 

அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?

 

Sunday, September 26, 2021

சொல்லுங்கள் பார்ப்போம் !

ஒரு ஊரில் வயதான பண்டிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அம்மூவரும் ஒவ்வொரு விஷயத்தில் நுண்ணறிவாற்றல் மிக்கவர்களாக இருந்தனர். முதல் மகன் உணவை குறித்த விஷயத்தில் நுண்ணறிவு மிக்கவனாக இருந்தான். இரண்டாமவன் பெண்களைக் குறித்த விஷயத்தில் நுண்ணறிவு மிக்கவனாக இருந்தான். மூன்றாமவன் பிறர் பயன் படுத்தும் பொருட்கள் மற்றும் அவர்கள் உடல் சம்பந்தமான விஷயங்களில் நுண்ணறிவு மிக்கவனாக இருந்தான்.

            ஒரு முறை இம்மூவருக்குள்ளும் தங்களில் யார் சிறந்தவன் என்ற போட்டி எழுந்தது. அதற்கான தீர்வை அந்த நாட்டு மன்னனிடம் சென்று அறிந்து கொள்ளுமாறு அம்மூவரின் தந்தையான அந்த வயதான பண்டிதர் கூறிவிட்டார். இம்மூவரும் தங்களைப் பற்றியும், தங்களின் திறமையைப் பற்றியும், இப்போது எழுந்திருக்கும் பிரச்சனையைப் பற்றியும் அந்த மன்னனிடம் கூறினர். 

                         நடந்ததையெல்லாம் கேட்ட மன்னன் அமூவரில் யார் சிறந்தவர் என்பதை அறிய, அம்மூவரையும் சோதிக்க எண்ணினான். அதன் படி முதலில் அந்த முதலாவது மகனுக்கு சுவையான ஒரு உணவை தயாரித்து, அவன் உண்ண ஏற்பாடு செய்து, அவனை அந்த உணவை உண்ணுமாறு வேண்டினான். அப்போது அந்த உணவை சிறிது எடுத்து ருசித்த அந்த முதல் மகன் இந்த உணவில் மனித பிணங்களின் ருசி இருப்பதாக கூறி அந்த உணவை மறுத்தான்

                     இதை பற்றி விசாரித்த அம்மன்னன் அந்த உணவு சமைக்கப்பட்ட தானியங்கள் ஒரு சுடுகாட்டிற்கு அருகிலிருந்த விளைநிலத்திலிருந்து அறுவடை செய்யப்பட்ட உண்மையை அறிந்து கொண்டான். அது போல இரண்டாவது மகனை சோதிப்பதற்கு ஒரு அழகான இளம் பெண்ணை, அவனிடம் பேசுவதற்கு அம்மன்னன் அனுப்பி வைத்தான். அந்த இரண்டாவது மகன் தன்னிடம் அந்தப் பெண் நெருங்கும் முன்பே அவளை தடுத்து நிறுத்தினான். மேலும் அந்தப் பெண் ஒரு ஆட்டின் மணத்தை அவளது உடலில் கொண்டிருப்பதாக கூறினான். இதை பற்றி விசாரித்த அம்மன்னன் அந்த பெண் சிறு வயதிலிருந்தே ஆடுகளின் பாலை அருந்தி வளர்ந்தவள் என்ற உண்மை நிலவரத்தை அறிந்தான். இப்போது மூன்றாவது மகனின் திறனை அறிய அவனை, தனது அரண்மையின் ஒரு அறையில் ஏழு அடுக்கு மெத்தைகள் போட்ட ஒரு கட்டிலில் உறங்கச் செய்தான். அப்போது நள்ளிரவில் அந்த மகன் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்தான். தன் உடலில் பிறர் உடல் சம்பந்தமான ஏதோ ஒன்று பட்டு அதனால் தன் உடல் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டது போல் உணர்ந்தான். இப்போது அந்த மெத்தைகளை அம்மன்னன் சோதித்து பார்த்த போது அதில் ஒரு பெண்ணின் நீண்ட தலைமுடி இருப்பதை கண்டுபிடித்தான். மூவரின் திறனையும் சோதித்து அறிந்து கொண்ட மன்னன் இந்த மூவரில் யார் சிறந்தவர் என்று தீர்மானிக்க யோசித்தான்.

சகோதர சகோதரிகளே! மூவரில் சிறந்தவன் 

யார் ? சொல்லுங்கள் ?

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...