Saturday, December 25, 2021

 

அபராஜிதா-part-5

திடீரென்று கதவு தட்டப்பட்ட சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் "சுவதனா"

கதவை திறந்து பார்த்தாள் .கடும்கோபமுடன் அவளது அம்மா சாமியாடி கொண்டிருந்தாள். “ஏண்டி எருமமாடே” எவ்வளவு நேரம்டீ…. தூங்குவ. பொண்ணா லக்ஷணமா விடியகாலைல எழுந்துண்டோம்  ,கோலம் போட்டு , ஆத்து  வேலை பார்த்தோம்னு இருக்கா! என்று  தனது வாயில் வந்த வார்த்தைகள் அனைத்தையும் வைத்து கிட்டத்தட்ட ஒரு  லக்ஷார்சனையே நடந்துகொண்டிருந்தது.

 ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ என்று நினைத்து கொண்டே கடிகாரத்தை பார்த்தாள் சுவதனா. நேரத்தை கவனிக்கும் முன்பே அவளது தாயார் மணி 11.30 ஆகுது முண்டம் நேரத்தை பாக்காத போய் ஸ்நானம் பன்னு  என்ன பொண்ணோ என்று சொல்லிக்கொண்டே துண்டை அவள் முகத்தில் தூக்கி எறிந்தாள்.

சுவதனா துண்டை எடுத்துக்கொண்டு முந்தைய இரவு நடந்த அனைத்தையும் நினைத்து கொண்டே குளிக்க சென்றாள் .பின்புதான் அவளுக்கு தெரிந்தது சபாபதியாரால் எழுதப்பட்ட அபராஜிதா கதை படித்து கொண்டிருந்தோம் என்று .”வராளனுக்கு, அபராஜிதாவுக்கு என்ன ஆனது என்று யோசித்தவாறு குளித்து விட்டு தலை ஈரத்துடன்….. ஹச்….. என்று ஒரு தும்மல் தும்மிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள் .

சரிதான் போஜனம் பன்ன வேண்டிய சமயத்திலே அல்பாஹாரம் சாப்டு. உடம்பு என்னத்துக்கு ஆகும் என்று மீண்டும் லக்ஷார்சனையை தொடங்கினாள்.

ஏய் வாய மூடமாட்ட என்று அதட்டி கொண்டே வந்தார் சுவதனாவின் தந்தை .

ஆமாம். பெரிய இவருமாதிரி என் வாய மூடுங்கோ. இவளை ஒரு வார்த்தை கேட்கறேளோ.

அவ என்னடான்னா அவ இஷடத்துக்கு இருக்கா.

 

சீ நோர் முய் என் பொண்ணுக்கு என்னடீ.... மஹாராணி அவ. நல்ல படிச்சிருக்கா  விஷாகப்பட்டணம் யூனிவெர்சிட்டிலோ ஆர்கியாலகி ஹையர் டிக்ரீ 

முடிச்சிருக்கா டீ .உன்னை மாதிரி பழைய பத்தாங்கிளாஸ் கிடையாது

 ஆமாம் இவள் படிச்ச டிக்ரீ நிறைய இடத்துல இன்னிக்கு கிடையவே கிடையாது. எவன் வேலை குடுப்பான்.ஒரு பொண்ண பெத்தவரா பேசறேளோ அவளுக்கு வயசு 26 ஆகறது ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம்னு இருக்கா.நேத்து கூட ரெண்டு ஜாதகம் வந்தது நான் பார்த்துட்டேன் ஸமானகோத்ரம்   இல்ல  .பையன் ஸாமவேதி திருப்பதிலோ ஸ்கேல் பாராயணாலோ உன்னாடு. நல்ல குடும்பம் தாடிபத்ரிதான் அவங்க சொந்த ஊரு தெரியுமோ!. இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த சுவதனா சட்டென்று எழுந்து அம்மா சாலு காஸ்த ஆகு ( அம்மா போதும் கொஞ்சம் நிறுத்து ) நீ பாக்கிற பையனையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனால் இப்போ இல்ல போதுமா. என் ப்ராஜெக்ட் இன்னும் ஒருவருஷத்துல முடிஞ்சிடும். அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன் சாலா ..நாகு இங்கேம் ஒத்து  நான் கிளம்பறேன்.

 

 வெள்ளவே எலுகுபண்டி……… என்றாள் அவள் அம்மா

ஏய் சீ.. ஆட பிட்டணி(பெண்குழந்தைய)  எப்படி பேசணும்னு தெரியாது.போதும் நிறுத்தும்மா என்றார் சுவதனாவின் தந்தை

 

சுவதனாவின் தாய் தந்தையர் இருவரும் மிகவும் நல்லவர்கள். சிறந்த ப்ராஹ்மண தம்பதிகள் தந்தையார் ஆசாரஷீலர் தாயாரும் ஆசாரமானவள். இவர்கள் இருவர் மற்றும் சுவதனா இவ்வளவுதான் மொத்தக்குடும்பமே.சுவதனாவின் தாய் படபடவென்று பேசுவாளே தவிர மிகவும் பயந்தவள். தந்தை ஒய்வு பெற்ற கேந்த்ரிய வித்யாலயா பள்ளியின் சமூகஅறிவியல் ஆசிரியர் .சமூக அறிவியல் நாட்டத்தினால்  சுவதனாவிற்கு ஆர்கியாலஜி படிக்க வேண்டும் என்று ஆசை .

  அம்மாடி போஜனம் பன்னிட்டு போலாமே! உங்க அம்மா எப்பவுமே இப்படித்தான்.

இல்லப்பா லைப்ரரிக்கு நேரம் ஆச்சு நான் கிளம்பறேன்.போறவழியில சரவணபவன்ல சாப்பட்றேன்.

பையன் திருப்பதிலோ உன்னாடு ஞாபகம் இருக்கட்டும்டீ…….. என்றாள் உள்ளிருந்து அவள் அம்மா

உடனே சுவதனாவின் தந்தையார் நல்லதுமா இன்னைக்கு நல்ல சாப்பாடா சாப்பட்றேன்னு சொல்ற. உங்க அம்மா சமையலேந்து தப்பிச்ச. என் தலையெழுத்து. நீ கிளம்பும்மா இந்தா கை செலவுக்கு வெச்சுக்கோ என்று தன்னிடம் இருந்த இரண்டு 500 ரூபா தாளை எடுத்து கொடுத்தார்.சிரித்துக்கொண்டே ஒரே ஒரு 500 ரூபாய் தாளை வாங்கி பர்சில் வைத்து  வண்டியை எடுத்துக்கொண்டு சென்றாள் சுவதனா…..

 

செல்லும் வழியில் சுவதனாவிற்கு “அபராஜிதாவின்” நினைவாகவே இருந்தது .அபராஜிதா வுக்கு  என்ன ஆனது வராளன் யாரை பார்த்து பயந்திருப்பான். கழுகின் கூடுகள் நிஜமான ஒளஷதங்களா? சிம்ஹேந்த்ரன் எதற்காக அபராஜிதாவை காப்பாற்ற வேண்டும்? பவ்யன் இறந்தது உண்மைதானா எல்லாம் சரி தொல்லியல் பட்டபடிப்பிற்கும் அபராஜிதாவின் கதைக்கும் என்ன சம்பத்தம். ஆராய்ச்சி என்ற பெயரில்  அபராஜிதாவின் கதையை பேராசிரியர் எதற்காக என்னிடம் கொடுத்தார் என்று பல கேள்விகளுடன் வண்டியை செலுத்திக்கொண்டே சரவணபவன் வாசலில் ஒரு நிமிடம் நின்றாள் ....அம்மாவின் குரல் (பையன் சாமவேதம் அத்யயனம் பண்ணிருக்கான். திருப்பதிலோ ஸ்கேல் பாராயணத்திலே இருக்கான்) நாம் இனி வெளியில் சாப்பிடுவதை நிறுத்தி கொள்வோமே என்று அவள் மனதில் நினைத்து கொண்டாள். நேராக வண்டி ஒரு பழைய சந்துக்குள் செல்ல   நூலகம் சுவதனாவை அன்புடன் வரவேற்றது. பழைய கட்டிடம் அப்படி ஒரு நூலகம் சென்னையில் இருப்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்

 

 ஒரு 80வயது மதிக்கத்தக்க முதியவர்.வா பாப்பா ....புஸ்தகம் வேணுமா இல்ல திருப்பி தரீங்களா

 

ரெண்டுமேதான் தாத்தா…இந்த புஸ்தகம் நாலு நாளைக்கு முன்னால அங்கிட்டு போனேன் .இது திருப்பி குடுக்கணும் அப்பறம் அபராஜிதா அடுத்த பாகம் வேணும் .

 

அபராஜிதாவா சரிதான் பைத்தியந்தான் புடிக்கல எனக்கு . அந்த பாழா போன கதையோட புஸ்தகத்தை கேட்டு காலைலேந்து 18 பேர் வந்து கேட்டு போய்ட்டாங்க அதுல ரெண்டு பேர் ஆர்கியாலஜி டிபாட்மென்ட் .

அந்த புஸ்தகத்தை ஏன் தேடணும் என்றாள் சுவதனா

 

அந்த முதியவரோ என்ன கேட்டா?  எனக்கு என்ன   ஜோசியமா தெரியும்.

 

சரி தாத்தா இந்த புஸ்தகத்தை நான் திருப்பி கொடுக்கிறேன் என்று அபராஜிதா புஸ்தகத்தில் முதல் நான்கு பாகங்களை திருப்பி கொடுத்து அங்கு இருக்கும் பதிவுப்புத்தகத்தில்  கையெழுத்து இட்டாள் .அவளது பெயரை கவனித்த அந்த நூலகத்தின் அதிகாரியான கிழவர்

 

யம்மாடி……… உன் பெயர்தான் சுவதனாவா

 

ஆமாம் தாத்தா! ஏன் கேட்கறீங்க?

 

 இல்லம்மா நேத்து சாயங்காலம் நூலகம் மூடப்போகின்ற சமயத்தில் யாரோ வந்து உன்னைப்பத்தி விசாரிச்சாங்க. உன்னோட போன் நம்பர் எல்லாம் வாங்கிக்கிட்டாரு. அவரு பெரு கூட……….. எதோ ஒரு ஹிந்தி பேரு………….. ஞாபகம் வந்திருச்சு அவரு பேரு ஜெயதேவ் ஓஜா……. அவருதான் உன்னைப்பத்தி விசாரிச்சாரு.

 

சுவதனாவின் முகத்தில் ஏனோ ஒரு குழப்ப ரேகை. யார் இந்த ஜெயதேவ் ஓஜா! என்று சிலை போன்று நின்றபடி யோசித்தாள்.

 

 யம்மாடி உன்கிட்ட தாமா பேசறேன் என்ன ஆச்சு என்றார் முதியவர்.

 ஒன்னும் இல்ல தாத்தா அந்த புஸ்தகத்துல அப்படி என்ன இருக்குன்னு யோசிக்கிறேன். இப்போ அதோட அடுத்த பாகம் கிடைக்காதா என்றாள் சுவதனா .

 

ரெண்டு பெருகிட்ட கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு…. ஒன்னு எழுதின அந்த சபாபதியார்கிட்ட கேட்கணும். ரெண்டு க்ராங்கனூர் ஹரிகேஷவன் நம்பூத்ரி கிட்ட கேட்டால் ஏதாவது விவரம் தெரியலாம் என்றார் முதியவர்.

 

சரி தாத்தா இவங்க விலாசம் இருக்கா

 

இருக்கும்மா…. இதோ இரு…… என்று சொல்லிவிட்டு ஒரு பழைய நோட் ஒன்று எடுத்து சபாபதியாரின் விலாசத்தையும், நம்பூத்ரியின் விலாசத்தையும் கொடுத்தார் அந்த முதியவர் வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்து சென்றாள்.

 

அவள் வண்டிக்கு வந்த பின்பு சீ…… அந்த தாத்தாவுக்கு ஒரு காபி குடிக்க கூட காசு கொடுக்கலையே என்று நினைத்தவாரு தனது பர்சில் இருக்கும் 50 ரூபாய் ஒன்றை எடுத்து கொண்டு நூலகத்தில் நுழைந்தாள் சுவதனா…… அங்கே .............................................அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார் ....சுவதனாவின் கதி ......................

.தொடரும்   

 

No comments:

Post a Comment

  அபராஜிதா-part-6 அதிவோ அல்லதிவோ ஸ்ரீ ஹரி வாசமு..................... என்று spbயின் இனிமையான குரலில் கைபேசியின் ஒலி அலறியடித்து கொண்டு அழைக...